search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறி விருந்து"

    • மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.

    பசும்பொன்:

    ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

     இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மழை வேண்டி கறி விருந்து நடந்தது.
    • இதில் அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா பருத்திக் கண்மாயில் புனித மரியாயி கல்லறை உள்ளது. இந்த கல்லறை கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 23-ந் தேதி திருப்பலி பூஜையும் கறிவிருந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கறிவிருந்துடன் கூடிய அன்னதானம் நடைபெற்றது. இதில் பருத்திகண்மாய் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டார்கள்.

    சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மரியாயி என்ற இளம் பெண் அப்பகுதியில் இயற்கை வைத்தியம் செய்து வந்தார்.இவரது சிகிச்சை முலம் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள். அவர் இறந்த பின்னர் அவரது சேவையை நினைவு கூறும்வகையில் சிவகங்கை அரசர் மாமன்னர் மருது பாண்டியர்கள் அப்பகுதியில் கல்லறைகட்ட இடம் கொடுத்தார்கள். கிராமமக்கள் சிறிதாக கோயில் அமைத்து கல்லறை அமைத்துள்ளார்கள் .அவரது நினைவைப் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டு புரட்டாசி 23-ந் தேதி மழைபெய்யவும் ,உலகமக்கள் நோயின்றி நலமுடன் வாழ்வதற்காக திருப்பலி மற்றும் அன்னதானத்தை கிராமமக்கள் சார்பில் நடத்தி வருகிறார்கள்.இந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை பருத்தி கண்மாய் கிராம மக்கள் செய்திருந்தார் கள்

    • ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
    • அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரம் 1000 ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோவிலில் இருந்து சுவாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சடையாண்டி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதன் பின் சுவாமி பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதனைத் தொடர்ந்து சடையாண்டி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்டஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. நள்ளிரவில் சடையாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழாவில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நள்ளிரவில் தொடங்கிய இந்த அன்னதானம் விடிய விடிய நடந்தது.

    இந்த அன்னதானத்தில் அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    • ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
    • சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் தினசரி மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்று இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஆடி மாதத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. நகரங்களில் இது போன்ற பழக்கம் மறந்து விட்டாலும் கிராமங்களில் இன்றளவும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புதிதாக திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை ஆடி முதல் நாளில் வரவழைத்து அவர்களுக்கு புத்தாடை வழங்கி கறி விருந்து சமைத்து பரிமாறுவார்கள். மேலும் அவர்களுக்கு சீர் வரிசையும் வழங்கி ஒரு வாரம் தங்கள் வீட்டில் வைத்து உபசரிப்பார்கள்.

    ஆடி விருந்து என்பது தலை ஆடி, நடு ஆடி, கழிவு ஆடி என 3 வகைகளில் விருந்து அளிக்கப்படுகிறது. ஆடி முதல் நாளில் அளிக்கப்படும் விருந்து தலை ஆடி என்றும் 2 வாரங்கள் கழித்து அளிக்கப்படும் விருந்து நடு ஆடி என்றும், கடைசி நாளில் அளிக்கப்படும் விருந்து கழிவு ஆடி என அழைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளுக்கு தலை ஆடி மற்றும் நடு ஆடியிலேயே விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது. கழித்து கட்டிய மருமகனுக்கு கழிவு ஆடி என்ற பழமொழி உள்ளது. இதனால் கடைசி ஆடியில் மருமகனை அழைத்தால் அது கவுரவ குறைச்சலாக இன்று வரை கிராமங்களில் கருதப்படுகிறது. இதனால் அவரவர் வசதிக்கேற்றபடி புதுமணத்தம்பதிகளுக்கு விருந்து அளித்து வருவது வழக்கமாக உள்ளது.

    அதன்படி ஆடி முதல் நாளான இன்று புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனால் சந்தையில் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி விற்பனை அமோகமாக நடைபெற்றது. வழக்கமாக பண்டிகை நாட்களில் கொண்டாடப்படுவதைப் போல ஆடியிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் ஏராளமான ஆடுகள், கோழிகள் அறுக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

    அதிகாலை முதல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இதனை வாங்கிச் சென்றனர். இதே போல காய்கறிகள் விற்பனையும், ஜவுளி உள்ளிட்ட விற்பனையும் அதிகமாக நடந்ததால் பெரும்பாலான வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
    • விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு ஆனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையாசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கினர். பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 250 மூடை அரிசியில் சாதம் தயாரானது.

    இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் கலைந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவர்.

    இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொர்க்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, குண்ணனம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

    ஜாதி மத வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்திற்காக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கறுப்பு நிறத்தில் உள்ள வெள்ளாடுகளை வளர்த்து நேர்த்திகடனாக செலுத்துவது வழக்கமாக உள்ளது. 

    • கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.
    • நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிபட்டியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு பங்கேற்ற வினோத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

    இந்த கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது.ஆனால் பெரிய அளவில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களின் இடையில் அரிவாள் மற்றும் வேல் கம்புகள் உள்ளது.இதையே தெய்வமாக நினைத்து இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள். இந்தப் பாரம்பரிய திருவிழாவை ஒட்டி தலையாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இங்கு குவிந்தனர்.அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் முன்பு ஆடுகள் பலியிடப்பட்டன.தொடர்ந்து பெரிய அண்டாக்களில் சாப்பாடு கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் ஆண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தனர்.பின்னர் அவர்களுக்கு வாழை இலையில் சாப்பாடு, கறி குழம்பு பரிமாறப்பட்டது.விடிய விடிய இந்த கறி விருந்து நடைபெற்றது.இதில் தலையாரிபட்டி,ராமராஜபுரம்,பாறைப்பட்டி, ஜோத்தாம்பட்டி,வடுகபட்டி, பூவகிழவன்பட்டி, மணியக்காரன்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, ஏழு கொட்டம், 4 கொட்டம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் பெரியோர்கள் என ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு கமகம கறி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, எங்கள் முன்னோர்கள் கிராமங்களில் நல்ல மழை பெய்திடவும்,நோய் நொடி இல்லாமல் கிராம மக்கள் நிம்மதியாக வாழவும், இந்த வழிபாட்டை நடத்தி வந்தனர். இந்த விழாவை நாங்களும் ஒன்று சேர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்துகிறோம். இந்த கறி விருந்து வெளியில் பெண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அருகிலேயே ஒரு பெரிய குழி தோண்டி மீதம் இருக்கக்கூடிய சாப்பாடு மற்றும் இலைகளை குழியில் புதைத்து விடுவோம் என்றனர்.

    ×